"அபாயம்".. புதுச்சேரிக்கு 7ம் கூண்டு.. சென்னையில் 6ம் புயல் கூண்டு ஏற்றம்.. அர்த்தம் என்ன தெரியுமா?
சென்னை: பெங்கல் புயல் காரணமாக பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். ஏற்கெனவே கடலூர், புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டும், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதன் பின்னணி அர்த்தம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது.இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அதன்படி பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் அந்த துறைமுகங்களில் திடீர் காற்றோடு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதாகும்.
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது 2ம் கட்ட அபாயத்தை குறிக்கும். அதோடு துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதோடு, துறைமுகம் கடும் வானிலையை எதிர்கொள்ளும் என்பதை இந்த புயல் எச்சரிக்கை கூண்டு உணர்த்தும்.
காரைக்கால், நாகை துறைமுகங்களில் 5ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இது முதற்கட்ட அபாய நிலையை குறிக்கும். அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதை இது உணர்த்துவதோடு கடும் வானிலை நிலவும் என்பதையும் இது குறிக்கும்.
இதுதவிர கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் 3ம்கட்ட அபாயத்தை உணர்த்தும். இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்போது இந்த துறைமுகம் புயல் நெருங்கும் அல்லது இந்த துறைமுகத்தை புயல் கடந்து செல்லும் என்பதை உணர்த்தும். நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் என்பதால் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications