வெளுத்து வாங்கும் கனமழை! விழுப்புரம்+புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு லீவு!
புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அக்.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தற்போது வரை இது இயல்பை விட 73% அதிக மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் ககனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரத்திலும் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே விடுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகள் வழக்கம் போல செய்யல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வானிலையை பொறுத்த வரை, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications