புதுச்சேரியில் கொஞ்ச நேரத்திலேயே 150 மி.மீ மழை.. தமிழ்நாடு வெதர்மேன் வீடியோ.. ஆடிப்போன மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் வெறும் இரண்டு மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையால் நகரில் கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் வீடுகளின் வாசலில் ஆளையே இழுத்து செல்லும் அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தது.

இதேபோல் தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்த சூழலில் தனியார் வானிலை நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் நேற்று இரவு வெளியிட்டிருந்த பதிவில், தொடர்ந்து 2வது நாளாக, புதுச்சேரி மீது மீண்டும் சிவப்பு தக்காளி வந்திருக்கிறது. எனவே வட உள் தமிழகம் மற்றும் வட தமிழகம் முழுவதும் பரவலான இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் புதுச்சேரியில் கனமழை பெய்தது. மிகக்குறைந்த நேரத்திலேயே புதுச்சேரியில் 150 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் வீடுகளை ஒட்டிச்செல்லும் பகுதிகள் வெள்ள நீர் அதிவேகமாக பாய்ந்தோடுகிறது. இந்த வெள்ள நீரில் யாராவது கால் வைத்தால், அவர்களை அப்படியே இழுத்து செல்லும் அளவிற்கு சென்றது. இதை பார்த்த பலரும் புதுச்சேரி மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதாக கூறினார்கள்.
புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் சாலைகள் அனைத்திலும் வெள்ள நீர் பெருங்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் கனமழை காரணமாக நெல்லித்தோப்பு முதலியார் பேட்டை லாஸ்பேட்டை திருக்கனூர் மதகடிப்பட்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதனிடையே கனமழை காரணமாக இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தனியார் பள்ளிகளும் சிறப்பு வகுப்பு மற்றும் எந்த வகுப்புகளும் நடத்த வேண்டாம் என்று பள்ளி கல்வி துறை அறிவுறித்தியுள்ளது.












Click it and Unblock the Notifications