காலையிலேயே சம்பவம்.. 10 மாவட்டங்களில் இன்று மழை பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை (வியாழக்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பதிவானது. இன்று அதிகாலை சென்னையில் மடிப்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பகல் 1 மணி வரை தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications