வெயிலே இருக்காது.. அடுத்த 2 மணி நேரம் ஒரே மழை தான்! 8 மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, குமரி உள்பட 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வானிலை மையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரியில் நேற்றும் பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழை பதிவானது. எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், உதகையில் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும், வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் மாலை 4 மணிக்குள் விடுதிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது. கோவை, நீலகிரி மட்டுமின்றி நெல்லை, தென்காசி, குமரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மாலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது.
சூழல் இப்படி இருக்க அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications