8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. இன்று வெளுக்க போகும் பேய் மழை.. மீனவர்களுக்கு முக்கிய வார்னிங்
சென்னை: வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 31 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை, மே 26 முதல் மே 31 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வார்னிங்
தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று புதன்கிழமை (மே 27 ஆம் தேதி) வரை மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மே 29 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்
24 மணி நேரத்தில் மழை அளவு
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. காங்கயம் (திருப்பூர்) 90 மி.மீ, செட்டிகுளம் (பெரம்பலூர்), நந்தியாறு (திருச்சி) தலா 70 மி.மீ, ஆனைப்பாளையம் (கரூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெத்தை (நீலகிரி), மேட்டூர் (சேலம்)- தலா 60 மி.மீ, ஒகேனக்கல் (தருமபுரி), குன்னூர் (நீலகிரி), மேட்டூர், சங்கரி துர்க்கம் (சேலம்), ஈரோடு, வாணியம்பாடி (திருப்பத்தூர்), துவாக்குடி (திருச்சி), குண்டடம் (திருப்பூர்)-தலா 50 மி.மீ. மழை பதிவானது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மே 29 வரை சற்று உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications