அடுத்த 3 மணி நேரம்.. நீலகிரி, கோவை, தென்காசியில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். நேற்று முன்தினம் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 05.30 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனால் நாளை முதல் ஜூன் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள், அதற்கேற்ப திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications