தமிழகத்தை தாக்க வருகிறதா புயல்?.. டெல்டா மாவட்டங்களில் பிச்சு உதறப்போகும் மழை
சென்னை: தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தமிழகத்தை நோக்கி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிய வலுவடையக் கூடும் என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தமிழகத்தை நோக்கி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாவ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வட இலங்கையையொட்டி திரிகோணமலை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் நிலப்பரப்பு ஊடுருவலை விட்டு அகன்று தமிழக பகுதிகளை நோக்கி நகரும்போது புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தற்போது வரை அதற்கான சூழலே உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக நாளை இரவில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும். நாளை மறுதினமும், அதற்கடுத்த நாளும் (சனிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங்களிலும், 29, 30 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புயலாக உருவாகும் பட்சத்தில் சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கவே தற்போது வரை வாய்ப்புள்ளது என்றும், அதுபற்றி ஓரிரு நாட்களில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications