காலையிலேயே சம்பவம் இருக்கு.. வெயிலுக்கு நடுவே சில்லுனு மழை.. 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மெசேஜ்!
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுப்பதற்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணிக்குள் தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணிக்குள் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை அப்டேட்
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மே 3 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனிடையே இந்த மாத இறுதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஈரோடு மற்றும் கரூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சாவூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், மதுரை மற்றும் சேலத்தில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கும் வெப்பம் கொளுத்தியது. கோவை, திருப்பத்தூர், திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டியது.
இன்றும் வெயில் கொளுத்தும்
இன்றும் தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை நிலவரம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications