விடிய விடிய வெளுத்துக் கொட்டிய மழை.. சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு! இன்றும் விடப்போவது இல்லை!
சென்னை: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இரவில் மழை பெய்துள்ளது. இன்று காலை நேரத்திலும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு 8.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. அண்ணா நகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, பூவிருந்தவல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. காற்று கடுமையாக வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வார இறுதி நாள் என்பதால் சென்னை அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு பலத்த காற்றுடன் மழையும் பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தரையிறங்க வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதில் 4 விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. கனமழை, சூறைக்காற்று காரணமாக, மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர்.
திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மேலும் கோவை, திருப்பூர், நீலகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் லேசாக மழை பெய்து வந்தது. இரவு நேரத்திலும் காற்றுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் லேசான மழை பெய்து வருகிறது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications