சென்னை மழையை போல தென்தமிழகத்தில் 2 நாளுக்கு அடித்து நொறுக்கும் மழை- வெதர்மேன் பரபர! எப்போது நிற்கும்
சென்னை: தென்தமிழகத்தில் இப்போது கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த கனமழை எப்போது வரை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தென்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றிரவு முதல் தென்தமிழகத்தில் பல இடங்களில் துளியும் இடைவெளி விடாமல் மழை பெய்து வருகிறது.

இது பார்க்க மிக்ஜாம் புயல் காலத்தில் சென்னையில் கொட்டிய மழை போலவே இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இதற்கிடையே வரும் நாட்களில் மழை எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன்: இது குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "குமரிக்கடல், இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டு, அது அங்கேயே இரண்டு நாட்கள் வரை நிலைகொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றின் குவிப்பு காரணமாகத் தென்தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அங்கே பல இடங்களில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இன்றும் பகல் முழுக்க சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சில மலைப் பகுதிகளில் இதை விட மழை அதிகமாக இருக்கும். தென்மாவட்டங்களில் 30 முதல் 50 செமி வரை மழை இருக்கும்.
மழை கொட்டும்: காற்றின் குவிப்பு, இதை மேலடுக்கு சுழற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இது குமரிக் கடல் அருகே இருக்கும் போது, மேற்கு பகுதியில் இருந்து வரும் காற்றின் குவிப்பு மலைப் பகுதிகளை ஓட்டிய பகுதிகள், தென் மாவட்டங்களில் மழையைத் தரும். இது மெதுவாக நகர்ந்து லட்சத்தீவுக்கு செல்லும் வரை கனமழை இருக்கும். இன்றிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை அல்லது மதியம் வரையிலும் கூட மழை பெய்யும். எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எல்லா இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மலைப் பகுதிகளில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை இருக்கும். மணிமுத்தாறு அணையில் முன்பு 50% மட்டுமே நீரின் இருப்பு இருந்தது. ஆனால், இப்போது அங்கே கனமழையால் நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் நாட்களில் பெய்யும் தீவிர மழையால் அங்குள்ள அனைத்து அணைகள் நிரம்பும். இதனால் அணைகளில் இருந்தும் நீரை திறந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
எச்சரிக்கை: எனவே, நீர் நிலைகளுக்கு அருகே இருப்போர், ஆற்றின் இரு புறமும் வசிப்போர், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த 2 நாட்களுக்கு, அதாவது 36 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றே எதிர்பார்க்கிறோம். எனவே, எச்சரிக்கை தேவை. ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என்ற போதிலும் தீவிர கனமழை இந்த 4 மாவட்டங்களில் மட்டுமே இருக்கும்.
இந்த சுழற்சி மிக மெதுவாக நகர்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு இது அங்கே இருக்கும் என்பதால் தென்தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கனமழை இருக்கும். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிச்சயம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மின்தடையும் கூட அடுத்த 2 நாட்களுக்கு அங்கே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியூர் மக்கள் தேவையற்ற இந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டாம்.
எப்போது வரை: செவ்வாய்க்கிழமை வரை மழை இருக்கும்.. அதன் பிறகே மழை நீர் வடியும். திடீரென வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் சில மாவட்டங்களில் கனமழை இருக்கும். இது முடிந்த பிறகு அடுத்து ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும். அது இலங்கை அருகே அமையும். இதனால் அப்போது இந்தளவுக்கு மழை இருக்காது. இப்போது பார்த்தோம் என்றால் தென்தமிழகத்தில் நல்ல மழை இருக்கும்.. இந்த 4 மாவட்டங்களில் தீவிர கனமழை இருக்கும்
சென்னை மக்களுக்குப் பெய்த வரை போதும். அவர்கள் எதுவும் கவலைப்படத் தேவையில்லை. இப்போது மழை தென்தமிழக பகுதிகளுக்கு மட்டும் தான். எனவே சென்னை மக்கள் இந்த கனமழையைப் பார்த்துக் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications