ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களில் தொடங்கிய மழையின் ஆட்டம்.. அடுத்த 2 மணி நேரம் முக்கியம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டும் இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில்தான் இந்த வெயில் தீவிரமாக இருக்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது.

எப்போதுமே வேலூரில்தான் வெயில் அதிகமாக பதிவாகும். ஆனால் இந்த முறை வேலூரைவிட ஈரோட்டில்தான் + கொங்கு மாவட்டம் என வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது.
இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக நேற்று திருவள்ளூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
மற்ற வட மாவட்டங்களான வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications