சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடரும்.. வானிலை மையம் ‘ஜில்’ அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தணிந்து கடந்த சில தினங்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. வெப்பம் வாட்டி வதைத்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழை எப்போது வரும் என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது. வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பிறகு குறைய தொடங்கும். ஆனால் இந்த முறை ஜூலை மாதம் வரை வெப்பம் அதிகமாக இருந்தது.

முதல் இரண்டு வாரங்களில் மட்டும் பல நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. அதன் பிறகு வானிலை மாறி, நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் தகித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். அதன்பிறகு அவ்வப்போது தமிழகம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தலைநகர் சென்னையில் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இன்று முதல் வரும் 14-ந் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்(12 ஆம் தேதி) மற்றும் அதற்கடுத்த நாளில் மேற்கு தொடரச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications