3 மணிநேரத்தில் 36 செமீ மழை! இது மேக வெடிப்பு இல்லை! அதுக்கும் மேல.. ராமேஸ்வரம் பற்றி வெதர்மேன் பதிவு
சென்னை: ராமேஸ்வரத்தில் 3 மணிநேரத்தில் 36 சென்டிமீட்டர் மழை வெளுத்து வாங்கி உள்ள நிலையில் இவ்வளவு தீவிரமான மழையை பார்த்ததே இல்லை. இதை மேக வெடிப்பு என்று கூறாமல் சூப்பர் மேக வெடிப்பு என்று சொல்லலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியம் முதல் மாலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் ‛‛பாம்பனில் மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று ராமேஸ்வரத்தில் கனமழை பதிவாகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ராமேஸ்வரத்தில் பெய்த மழையை பார்த்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வியந்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ராமேஸ்வரத்தில் 3 மணிநேரத்தில் 362 மில்லி மீட்டர் (36 சென்டிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது. நான் பிளாக்கிங் எழுத தொடங்கிய காலத்தில் இருந்து இவ்வளவு தீவிரமான மழையை பார்த்தது இல்லை. இதை மேக வெடிப்பு என்று கூறாமல் சூப்பர் மேக வெடிப்பு என்று அழைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications