அடுத்த 2 மணி நேரம்.. 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு வங்க கடலில் கடந்த 25 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில் புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிடப்பட்ட இந்த புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கரையை கடக்கும் ஃபெஞ்சல்: அதேபோல் இன்று மாலை 5.30 மணி அளவில் பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியதாக தற்போது வானிலை மையம் தெரிவித்தது. அதாவது புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும், அடுத்த 3 முதல் 4 மணி நேரத்திற்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என்று தெரிவித்து உள்ளது. புயலானது தற்போது 7.கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.
கடுங்காற்று: பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் கடுங்காற்று வீசி வருகிறது. கடற்கரையில் கடல் அலைகள் மிக ஆக்ரோஷமாக எழுகின்றன. புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோரங்களில் சுழல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்: அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
9 மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications