மிரட்டும் ரெட் அலர்ட்.. மக்களே ரெடியா இருங்க.. வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னைக்கு அதிகனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும், வெள்ள பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கவுள்ளது. ஆரம்பத்திலேயே சென்னையை குறி வைத்துள்ள பருவமழையால் அதிகனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை, நாளை மறுநாள் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே போனமுறை சிக்கியதைப் போல இந்த முறையும் வெள்ளத்தில் உடைமைகளை இழக்கக் கூடாது என்பதால் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்த தொடங்கிவிட்டனர் பொதுமக்கள். மேம்பாலத்தின் இருபுறங்களிலும் கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையால் கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு மழைநீர் வடியாமல் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பழுது பார்க்க லட்சக்கணக்கில் செலவு செய்தனர்.
இந்நிலையில், எத்தனை மணி நேரம் மழை பெய்யும், மழை பாதிப்பு கடந்த முறை போல இருக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஸ்ரீ காந்த் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடதமிழகம் கரை நோக்கி வரும்.
இதன் காரணமாக, கடலோர தமிழகம் முதல் அதாவது டெல்டா பகுதியில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடைப்பட்ட கடலோரப் பகுதிகளில் பரவலாக அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால்தான் பொதுமக்களுக்கு மழை குறித்த முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டல சுழற்சியானது கிட்டத்தட்ட 24 மணி நேரம் வடதமிழகத்திற்கு கிழக்குப் பகுதியில் மெதுவான நகர்வு இருக்கும் என்பதால் ஒரு சில பகுதிகளில் மிக பலத்த மழையோ, அதீத மழையையோ எதிர்பார்க்கலாம். இரண்டாவதாக, கிழக்கில் இருந்து மேற்காக அரபிக்கடல் நோக்கி நகரவுள்ளதால் உட்புறப் பகுதிகளில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
சீசனின் முதல் மழை என்பதால் வெள்ளத்திற்கான பாதிப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. இப்போதுதான் சீசன் ஆரம்பித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்கள் மழை பெய்யும். அதனால், 6 முதல் 12 மணி நேரம் மழை இருக்கும். இதனால், குறைந்த அளவிலான நீர் தேங்கும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. ஆனால், தொடர்ந்து இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
மிக்ஜாம் புயலுடன் இதனை ஒப்பிட முடியாது. அதேபோல இதனை எடுத்துக் கொண்டாலும் இந்த சுழற்சி நிலையாக நிற்காது. நகர்ந்து கொண்டேதான் இருக்கும். தென்கிழக்குப் பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வட தமிழக பகுதியிலோ அல்லது அதனையொட்டிய தெற்காந்திர பகுதிகளிலோ கரையைக் கடந்து உட்புறப் பகுதிகளுக்குச் செல்லும்.
பலத்த மழை மற்றும் மிக பலத்த மழை பல்வேறு பகுதிகளில் பெய்யவுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் இயல்பை விட கடல் வெப்பம் சற்று அதிகமாகவே உள்ளது. அதனால், மிக கன மழையாகப் பெய்து வருகிறது. அதனால், எதிர்பார்த்ததைவிட மிக அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications