தென்தமிழகத்துக்கு ‛ரெட் அலர்ட்’.. இன்று மிக கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே கவனம்
சென்னை: தென்தமிழகத்துக்கு இன்று ‛ரெட்அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தென்தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் கனமழை பெய்த நிலையில் பலஇடங்களில் தொடர்ந்து லேசான மழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் மதியம் முதல் மாலை வரை இடைவிடாது கனமழை என்பது கொட்டி தீர்த்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டு 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்தது. அதேபோல் ராமேஸ்வரத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தான் இன்று தென்தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்தமிழக மாவட்டங்களில் இன்று மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வானிலை மையம் சார்பில் குறிப்பிட்ட ஏரியாவில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து, ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். இதில் ரெட் அலர்ட் என்பது 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டர் (அதாவது 20 சென்டிமீட்டர்) வரை மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மட்டுமே விடுக்கப்படும். அந்த வகையில் தென்தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளா கடலோர பகுதிகளை ட்டிய தென்கிழக்கு அருபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக வரும் 23ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதகிளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications