நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலு பெற்றிருக்கிறது. எனவே நாளை சில மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் மிதமான மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
எந்தெந்த மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட்? ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
- கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்
- நீலகிரி
மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ரெட் அலர்ட் எனில் 24 மணி நேரத்தில் 204.5 மி.மீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று அர்த்தம். இந்த அலர்ட் கொடுக்கப்பட்டால் கடும் வெள்ளம் ஏற்படலாம். வீடுகள் சரிந்து விழுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படும்.
எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?
- திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள்
- தேனி
- கன்னியாகுமரி
- தென்காசி
உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையின்போது 24 மணி நேரத்தில் 115.6 மி.மீ - 204.4 மி.மீ அளவுக்கு மழை பெய்யும். இதனால் வீடுகளில் தண்ணீர் புகும். சாலைப் போக்குவரத்து பாதிப்படையும். மலைப்பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படும். ஆரஞ்சு எச்சரிக்கையின்போதும் கவனமாக இருப்பது முக்கியம்.
எந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?
- திருப்பூர்
- திண்டுக்கல்
என இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த எச்சரிக்கையின்போது 64.5 மி.மீ - 115.5 மி.மீ என மழை பெய்யும். இது சாதாரண மழை அளவுதான். சிறிய அளவில் வெள்ளம் ஏற்படலாம். அதுவும் மிகவும் அபூர்வம்தான். சாலைகளில் தண்ணீர் தேங்கும். மற்றபடி இந்த அளவு மழை விவசாயத்திற்கு தேவையானதுதான்.
முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நண்பகல் தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்தது.
பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, இன்று காலை 8.30 மணி அளவில், தெற்கு மத்திய மஹாராஷ்ட்ரா மற்றும் அதனை ஒட்டிய மரத்வாடா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வழுவிழக்ககூடும்.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
இதனால் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.28ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.29ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.30 மற்றும் 31ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நாளை (26-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications