மிக்ஜம் புயல்.. டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு! லிஸ்ட்டில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க
சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயல், வரும் 5ம் தேதி சென்னைக்கு அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிகப்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இந்த புயல் வரும் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 5ம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளுர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
புயல் கரையை கடக்க இருப்பதால் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னையில் மக்கள் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டிச.4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே டிச.4 மற்றும் டிச.5ம் தேதி சென்னையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம், காவல்துறை எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications