ஆட்டம் காட்டிய பெங்கல்! நள்ளிரவு முதல் கொட்டிய கனமழை! சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அது போல் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை, காரைக்காலில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை பெய்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறு புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது நேற்று முன் தினம் இரவு புயலாக மாறும் என கணிக்கப்பட்டது.
ஆனால் நேற்று காலை முதலே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் நகரும் வேகம் குறைந்ததால் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் புயலாக மாறாது என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது நேற்றைய தினம் இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகரத்தொடங்கியது. இது சென்னைக்கு தென் கிழக்கு திசையில் 470 கிலோமீட்டர் தூரத்திலும் புதுவையிலிருந்து 410 கி.மீ. தூரத்திலும் நாகையிலிருந்து 340 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டது.
இது புயலாக மாறி தமிழகம்- புதுவை இடையே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து, மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வேகம் எடுத்துள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால், மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கிறது.
அத்துடன் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அது போல் அதிகனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரத்திலும் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர், முகப்பேர், புரசைவாக்கம், பெரம்பூர், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்தது. இன்றும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications