அடிச்ச வெயிலுக்கு.. சரியான பதிலடி! இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெயில் வழக்கம்போல கொளுத்தி எடுத்தது. இந்நிலையில் இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "கோவை, தேனி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்
64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
முன்னதாக விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "நேற்று (10-04-2025), மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-04-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
11-04-2025 மற்றும் 12-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-04-2025 முதல் 17-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 11-04-2025 முதல் 14-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். 15-04-2025 : தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு
11-04-2025 மற்றும் 12-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 11-04-2025 மற்றும் 12-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
இன்று (11-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (12-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications