ஏசி வாங்க போறீங்களா.. நீங்கள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.. பாருங்க
சென்னை: டெல்லியில் நேற்று 50 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. சென்னையில் 38 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது. ஆனால் காற்றில் ஈரப்பதம் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் வெப்ப நிலை 49 டிகிரி என்கிற அளவிற்கு உணர வைக்கிறது. இப்படியான சூழலில் ஏசியை ஆடம்பர பொருளாக கருத வேண்டுமா? 28 சதவீதம் ஜிஎஸ்டி நியாயம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வானிலை நிலவரம் என்பது கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் மிக கடுமையாக இருந்தது. சென்னை, டெல்லி போன்ற பல்வேறு பெரிய நகரங்களில் வெப்ப அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று 51 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. இது இதுவரை ஏற்படாத வெப்பநிலை ஆகும். இந்த வெயில் காரணமாக வெளியில் சென்ற மக்கள் மயங்கியே விழும் அளவிற்கு நிலைமை இருந்தது.

சென்னையை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களாகவே வெப்பம் மிக கடுமையாக இருக்கிறது. சென்னையை மற்ற ஊர்களின் வெயிலுடன் ஒப்பிட முடியாது.. காரணம்.. மற்ற ஊர்களில் காற்றில் ஈரப்பதம் சென்னை அளவிற்கு இருக்காது. தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் அதிகப்படியான மரங்களும், காடுகளும் அந்த ஊரையே காப்பாற்றிவிடும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை.. காங்க்ரீட் காடு ஒரு பக்கம், மறுபக்கம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இந்த வெயில் எப்படி இருக்கும் என்றால், வழக்கமான வெப்பநிலையை விட 10 டிகிரி அதிகமாக இருப்பது போல் உணர வைக்கும்.
இதுபோன்ற வெப்பத்தை சமாளிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஏசி இயந்திரம் இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது. நள்ளிரவிலும் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தால் சென்னை கடந்த ஒரு மாதமாக கொதிக்கிறது. ஏசி இல்லாத வீடுகளில் வாழும் மக்கள் வெப்பத்தை தடுக்க முடியாமல் நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். சரியாக தண்ணீர் குடிக்காமல் போனால், பெரிய பாதிப்பை சந்திக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஏசி இயந்திரம் இருக்கும் வீடுகளில் வசிப்போர் மட்டுமே சென்னையில் தப்பிக்க முடிகிறது..
எனவே ஏசி என்பதை இன்றும் ஆடம்பர பொருளாக கருத வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் தாங்க முடியாத வெயிலும், மழையும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நிலை இனி, ஏசி இயந்திரத்தை ஆடம்பர பொருளாக கருதக்கூடாது என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஏசி இயந்திரம் என்பது சாமானிய மக்கள் வாங்கும் அளவிற்கு விலையில் இல்லை.. இதற்கு காரணம் ஏசி இயந்திரம் ஆடம்பர பொருளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதுதான். ஏசி இயந்திரம் வாங்க 28 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். ஒன்றரை டன்னுள்ள 40000 ரூபாய் மதிப்புள்ள ஏசி வாங்க வேண்டும் என்றால், 11200 ரூபாய் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். அதாவது 40000 ரூபாய் எசி 51200 ஆக இருக்கும். இதேபோல் 25000 ரூபாய் மதிப்புள்ள ஏசிக்கு ஜிஎஸ்டி வரியாக மட்டும் 7000 ரூபாய் கட்ட வேண்டும்.
ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த செல்போன் இன்றைக்கு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இதேபோல் இருசக்கர வாகனங்களும், டிவியும் அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன. இப்போது ஏசியும் அத்தியாவசிய பொருட்களில் மாறிவருகிறது. எனவே ஜிஎஸ்டி 28 சதவீதம் என்பது நியாயம் தானா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏசி இல்லாமல் வரும் காலத்தில் கடைகளோ அல்லது வீடுகளோ இல்லாத நிலை ஏற்படும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் வரிவிதிப்புகள் எளிமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications