அடுத்த சம்பவம் ஆரம்பம்.. பேய் காற்று+ தீவிர கனமழை நிச்சயம்.. எங்கு தெரியுமா! வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். எங்கே மழை பெய்யும் என்பதை விளக்கியுள்ள அவர், காற்றின் வேகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து சென்னை இன்று மீண்டுள்ளது. இனி அடுத்த சில நாட்களுக்குச் சென்னையில் பெரியளவில் மழை இருக்காது என்றே வானிலை மையம் கூறுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்: அதேநேரம் மற்ற பகுதிகளில், குறிப்பாகத் தென்தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே அடுத்து வரும் நாட்களில் மழை எங்கே இருக்கும், பலத்த காற்று எங்கெல்லாம் வீசும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,
இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "தென் தமிழகத்தில் சம்பவம் ஆரம்பித்துவிட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் சம்பவம் ஆரம்பித்துவிட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை நாம் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். மணிமுத்தாறு & பாபநாசம் அணை இரண்டிலும் உபரி நீர் இருக்கும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
அசுர வேகத்தில் காற்று: மாஞ்சோலை மலைகளில் அசுர வேகத்தில் காற்று இருக்கும். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் சில பகுதியிலும் கனமழை பெய்யும். குழித்துறையாறு, தாமிரபரணி பகுதியில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (டிச.17) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
எங்கே மழை: அதேபோல நாளை (டிச. 18) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications