மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போயிடுச்சா.. இன்று முதல் சிறப்பு முகாம்
சென்னை: சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெரு மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டது.

இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் குறைந்தது 4 அடி முதல் 15 அடி வரை நீர் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்த சான்றிதழ்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு மூல பத்திரம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கிவிட்டன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவதற்காக சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன. அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications