“அல்லு விடுதே” அர்த்தம் கேட்டு.. தேஜ் புயலின் பெயரும் மேட் இன் இந்தியாதான் - எந்த இடத்தில் தாக்கும்?
சென்னை: அரபிக் கடலில் உருவாகி இருக்கும் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில், அது இந்தியாவால் வைக்கப்பட்ட பெயர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 19 ஆம் தேதி காலை தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் தற்போது புயலாக வலுபெற்று உள்ளது.

இது மேலும் வலுவடைந்து நாளை மாலை தீவிர புயலாக நிலவக்கூடும் என்றும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24 ஆம் தேதி அன்று தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த நிலையில் இந்த புயலுக்கு 'தேஜ்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. வழக்கமாக இந்திய கடலோர பகுதிகளில் வரும் புயல்களுக்கு அரபு நாடுகள் வைக்கும் பெயர்களே பெரும்பாலும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த புயலுக்கு வைக்கப்பட்டு உள்ள தேஜ் என்ற பெயர் இந்தியாவால் வைக்கப்பட்டு உள்ளது. தேஜ் என்றால் வேகம் இந்த அரபிக் கடலில் ஏற்பட்டு உள்ள இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால், அரபிக் கடலோரம் அமைந்து உள்ள கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா மாநில கடலோர பகுதிகளில் பலத்த புயல் காற்றுடன் கனமழை கொட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 19 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது 23 ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications