சட்டென மாறிய வானிலை.. திடீரென சென்னையில் கொட்டித் தீர்த்த மழை.. மக்கள் ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு கூட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்த நிலையில், இன்று சென்னையில் திடீரென மழை கொட்டியது. திடீரென வானிலை மாறி மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு கூட வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சென்னையில் திடீர் மழை
இந்த நிலையில் இன்று மதியம் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மதியம் 12 மணியளவில் சென்னையில் கிண்டி, வேளச்சேரி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்தது.
எனினும் மழை பெரிய அளவில் இல்லாமல், தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையில் இருந்து 6 சதவீதம் குறைவாகவே பெய்திருந்தது. தற்போது ஆகஸ்டு மாதத்தில் வழக்கத்தைவிட மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று டெல்டா வெதர்மேன் கூறியிருந்தார்.
மிக கனமழை கொட்டும்
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்?
வரும் 4 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று (03-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications