உச்சகட்ட எதிர்ப்பு: டிச. 26-ல் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருகிறார் நிர்மலா சீதாராமன்!
சென்னை: தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தூத்துக்குடி வெள்ள சேத பாதிப்புகளை வரும் 26-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிக்ஜாம் புயல் வட தமிழ்நாட்டு மாவட்டங்களை புரட்டி எடுத்தது. இந்த பேரிடரின் ஈரம் காய்வதற்குள் தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்குப் பின் பெருமழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. இப்பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் முப்படைகளும் பெரும் உதவி செய்தன.
இந்நிலையில் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதியாக ரூ12,000 கோடி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தமிழ்நாட்டு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். மேலும் தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி தரவில்லை என்ற அதிருப்தியில் பேசிய அமைச்சர் உதயநிதியையும் கடுமையாக விமர்சித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Programme details of Smt @nsitharaman's visit to Thoothukudi, Tamil Nadu on December 26, 2023. pic.twitter.com/MVOiN3d5tF
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) December 23, 2023
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் டெல்லி பேட்டி தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. அவரது பேச்சும் உடல்மொழியும் தமிழ்நாட்டு மக்களை அவமதித்து இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்ற நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வரும் 26-ந் தேதி நிர்மலா சீதாராமன் வருகை தருகிறார். தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகள நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டிருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் வருகை மேலும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications