காற்றழுத்தம் சென்னைக்கு அருகே வந்தாலும்.. கனமழை பெய்யாது! ஏன் தெரியுமா? வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துள்ளது என்றும் இனி மழை குறையும், எனவே மேம்பாலங்களில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை உரிமையாளர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றுவிடலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களுக்கு நல்லதொரு செய்தி காத்திருக்கிறது. இனி மிதமான மழை பெய்யும். அதிக மழைக்கு வாய்ப்பில்லை.

சென்னைக்கு அருகே காற்றழுத்தம் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையிலும் அது கரையை கடக்கும் பகுதிக்கு வடக்கு பக்கத்தில்தான் காற்று குவிந்திருக்கிறது. எனவே சென்னை மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்.
இந்த காற்றழுத்தத்திலிருந்து இருந்து இனி அதீத மழை பெய்யாது. இயல்பான மழையே கிடைக்கும். காற்று குவிதல் தெற்கு ஆந்திராவுக்கு நகர்கிறது. காற்றழுத்தம் கரையை கடந்ததும் அதன் தாக்கத்தால் வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மழை பெய்யும். அதுவும் நமக்கு மேனேஜ் செய்யும் அளவுக்குத்தான் இருக்கும்.
எனவே மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ள கார்களை உரிமையாளர்கள் வீட்டுக்கு கொண்டு செல்லலாம். கடந்த இரு தினங்களில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் சென்னையில் சில இடங்களில் மழையின் அளவு 300 மி.மீ.ரை நெருங்கியது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதலே பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் தேங்கியது. மழையின் காரணமாக கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், சிபி சாலை சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் எம்ஆர்டிஎஸ் சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் சென்னையில் மழை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதுவரை 3,17,935 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் மழை நீர் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளது. 103 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications