ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்
சென்னை: வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "மலாக்கா ஜலசந்தியில் இந்தோனேசியாவிற்கு அருகில் சென்யார் புயல் உருவாகிறது. அதற்கு முன்பு இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகலாம். ஆனால், அது குறுகிய கால சூறாவளியாக இருக்கும். இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியவுடன் அது மறைந்து போகத் தொடங்கும்.

இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு சென்யார் புயல் என்று பெயரிடுவது குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஏனெனில் இந்தோனேசியாவிற்கு அருகே உருவாகும் சென்யார் தமிழ்நாடு அல்லது பிரதான இந்திய கடற்கரையை பாதிக்கப் போவதில்லை. இது மலாக்கா ஜலசந்திக்கு அருகில் வட்டமிடும்" என்று கூறியிருக்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதால் அதற்கான விளக்கத்தையும், அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் வெதர்மேன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, இரண்டு சின்னங்களும் ஒன்றை ஒன்று தாக்கி, மற்றொன்றை வலுவிழக்க செய்யும் அபாயம் உள்ளது.
குறிப்பாக இந்தோனேசியாவிற்கு அருகே உருவான சென்யார் புயல், இதன் நகர்வு பாதையை பொறுத்து தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி வரக்கூடும். அப்படி வந்தால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளுக்கு கனமழையை கொடுக்கும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அக்.20ம் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை தமிழகம் முழுவதும் சராசரியாக 348.9 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தின் இயல்பு மழை அளவு 331.1 மி.மீ அந்த வகையில், மழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications