'சக்கரம்' ஆரம்பிச்சிடுச்சு.. சென்னையில் அடுத்த 3 நாள் குறித்து.. தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் பதிவு
சென்னை: வங்கக்கடலில் உருவான 'மிக்ஜம்' புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கரையை கடக்க உள்ள நிலையில், இந்த புயல் சக்கரம் சென்னையில் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தாழ்வுமண்டலம் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு சுமார் 860 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 910 கி.மீ. தொலைவிலும் நேற்று காலை நிலை கொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் ஞாயிற்றுக்கிழமை புயலாக அது வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே 630 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 740 கிலோ மீட்டர் தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது என்றும் இந்த மிக்ஜம் புயல் வரும் 5-ந்தேதி காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே சுமார் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரணமாக நாளை ஞாயிறு அன்று வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.
திங்கள்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகிற 4-ந்தேதி சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலெர்ட்) விடப்பட்டுள்ளது என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், புயலின் தாக்கம் காரணமாக முதற்கட்டமான மழை சென்னையில் விரைவில் விழுகப்போகிறது. சென்னையில் குறுகிய நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், சில நேரங்களில் மிக தீவிரமாக பெய்யும் என்று இன்று காலை கூறியிருந்தார். இன்னொரு பதிவில் இந்த நவம்பரில் நல்ல மழை பெய்துள்ள டெல்டா மாவட்டங்களில், இந்த புயலால் கனமழையை இழக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் காலை 11 மணிக்குமேல் பதிவிட்ட ட்விட் பதிவில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ktcc பகுதிகளில் திடீரென மழை பெய்யும், திடீரென சூரியன் வரும்.. இப்படி மாறி மாறி இருக்கும். புயல் தீவிரமடையும் போது மேகங்கள் மொத்தமாக அடர்த்தியாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. புயலின் சக்கரத்தால் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறினார். இதனிடையே வெதர்மேன் சொன்னபடியே காலையில் இருந்து திடீர் திடீரென சென்னையில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications