சின்ராச கைல பிடிக்க முடியாது! சென்னையில் இன்று இரவு வெளுத்து கட்டப் போகும் மழை! வெதர்மேன் அப்டேட்
சென்னை: பாண்டிச்சேரி மற்றும் கடலூரில் இருந்து மேகங்கள் மெல்ல நகர்ந்து வரும் நிலையில், இன்று இரவு முதல் காலை வரை கேடிசிசி எனப்படும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மதுரை - சிவகங்கை பகுதியில் புயல் உருவாவதாகவும் அவர் கணித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளிட்டவை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

15ஆம் தேதியான நாளை முதல் 17ஆம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் , 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், நாளை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி - காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு முதல் காலை வரை கேடிசிசி எனப்படும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” KTCC ( காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும்.
பாண்டி மற்றும் கடலூரில் இருந்து மேகங்கள் மெல்ல நகர்ந்து வருகின்றன. அதுவும் இரவு நேரத்தில்.. இன்று இரவு முதல் காலை வரை நம்ம சின்னராசு KTCCஐ கையில் பிடிக்க முடியாது. நல்ல மழை பெய்யும்.. மக்கள் குளுமையான இரவை அனுபவிக்கலாம். கோயம்புத்தூரில் வழக்கமாக மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. இது கோயம்புத்தூரில் அதிக மழை பெய்யும் மாதங்களில் ஒன்றாகும். மதுரை - சிவகங்கை பெல்ட்டில் மீண்டும் புயல் உருவாகிறது.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications