சென்னையை காற்றழுத்தம் நெருங்குவது எப்போது? மழை பீக்கில் அடிக்க போகும் நாட்கள் இவைதான்- வெதர்மேன்
சென்னை: சென்னை அருகே நெருங்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 16ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்றும் நாளையும் அதீத மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று சூரியனும் வெளியே தலை காட்டும் என்பதால் குழந்தைகள் பள்ளிகளுக்கும் பெரியவர்கள் அலுவலகங்களுக்கும் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சுடச்சுட வெளியிட்ட போஸ்ட்டில் கூறியிருப்பதாவது: வடதமிழகத்தின் மேல் பந்து போன்று பெரிய அளவிலான மேகக் கூட்டம் இருந்ததால் சென்னையில் சொல்லிக் கொள்ளும் படியாக மழை பெய்தது. இது ஓபனிங்தான். நாள் முழுவதும் மழையானது அங்கும் இங்கும் இருக்கும்.
இரவு நேரங்களும் அதிகாலை வேளைகளிலும் தீவிர மழை இருக்கும். பகல் நேரங்களில் இருக்காது. ஆனால் காற்றழுத்தம் சென்னைக்கு அருகே வரும் போது அந்த நாள் முழுக்க மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவரை மழை விட்டு விட்டு பெய்யும். மழை இருந்தாலும் அலுவலகங்களுக்கு செல்வோர் செல்லலாம். வெயிலும் வரும், உடனே லேசான மழையுயம் பெய்யும்.
சென்னை கடலோரத்திற்கு காற்றழுத்தமானது வரும் 16 ஆம் தேதி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் 16ஆம் தேதியும் 17 ஆம் தேதியும் கனமழை பெய்யும். அன்றைய தினத்தில் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். எனவே இன்று குழந்தைகள் பள்ளிகளுக்கும் பெரியவர்கள் அலுவலகங்களுக்கும் செல்லலாம். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முகப்பேர், மந்தைவெளி, மயிலாப்பூர், லஸ், சாந்தோம், மெரினா, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆவடி, தாம்பரம், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில் விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மிதமான மழை, கன மழை, மிக கன மழை என்று மட்டுமே கூற முடியும் என்ற பாலச்சந்திரன், எவ்வளவு சென்டி மீட்டர் மழை பெய்யும் என துல்லியமாக கூற முடியாது என தெரிவித்தார். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications