பிப்ரவரி முடியல.. அதுக்குள்ள 100 டிகிரி தொட்ட வெயில்! வரும் நாட்கள் எப்படி இருக்கும்? அப்டேட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலைதான் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. மட்டுமல்லாது பனிமூட்டம் குறித்தும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. இன்னும் கோடைக்காலம் தொடங்கவில்லை என்றாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று முன்தினம் 100 டிகிரி வெயில் வாட்டியது. மேலும், நீலகிரி, கரூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலைதான் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில்,
"இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 11 மற்றும் 12ம் தேதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13 மற்றும் 14ம் தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications