தமிழகத்தில் இன்று மாலை வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும்! ராட்சத அலைகள் எழும்பும்.. வார்னிங்
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை வரை கடலில் ராட்சத அலைகள் எழும்பும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழகம், கேரளாவில் கள்ளக்கடல் எனும் நிகழ்வு நடப்பதால் பொதுமக்களும் மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி முதல் தொடங்கியதாகவும் நேற்று இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை வரை தமிழகத்தில் கடல் பகுதி கொந்தளிப்பாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கடற்கரையில் ராட்சத அலைகள் எழும்பும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளிக்க வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தென் தமிழக கடல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் அதிகாலை 2.30 மணி முதல் நேற்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் என்பது புயல், காற்றழுத்த தாழ்வு நிலை வரும் போதுதான் ஏற்படும். ஆனால் இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் ஏற்படுவது என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது. 16 முதல் 23 வினாடிகளுக்கு ஒரு அலை வீதமும் 1.8 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் உருவாகும் என்கிறார்கள்.
இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இன்றி கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக யாரும் கடற்கரையில் இறங்கி குளிக்க வேண்டாம் என குமரி மாவட்ட நிர்வாகமும் திருச்செந்தூர் காவல் துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்க வேண்டாம் என சொல்லியும் நேற்று தேங்காய்பட்டினம் கடற்கரையில் பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றார்.
அப்போது இருவரும் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் அங்கிருந்த மக்கள் பிரேமதாஸை காப்பாற்றினர். ஆனால் ஆதிஷா ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழக கடலோரத்தில் இன்று மாலை வரை ராட்சத அலைகள் எழும்பும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications