சென்னையில் 106 டிகிரி சுட்டெரிக்கும்! வேலூரில் மழை ஓவர்! கரூரில் 50:50 சான்ஸ்! வெதர்மேன் அப்டேட்
சென்னை:சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் தத்தளித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்தது. மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் பல நகரங்கள் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாண்டியது.
வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு கடுமையாக இருக்கிறது. காலையில் வெயில் என்பதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதால் இந்த டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
வெப்ப அலையும் தொடர்ந்து வீசி வருகிறது. கடந்த சில தினங்களாக ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களே மாறி மாறி அதிகபட்ச வெப்பநிலையில் முன்னணி வகித்து வந்தன. நேற்று முன் தினம் தமிழகத்தில் அதிகபட்ச வெயில் பட்டியலில் சென்னை இடம் பெறவில்லை. இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் எல்லாம் காலை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
இந்த மழையால் மக்கள் மனங்கள் குளிர்ந்துள்ளது. இந்த நிலையில் தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யும். நேற்றும் இன்றும் கடல் சீற்றம் காரணமாக கள்ளக் கடல் நிகழ்வால் தென் தமிழக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அது போல் ஏலகிரி, சேலம், ஊத்தங்கரை , தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும். சேலம் ஏற்பாடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல் , நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சில நாட்களாக கரூரில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் அந்த பகுதியிலும் மழை பெய்ய 50- 50 சான்ஸ் இருக்கிறது. ஈரோடு அல்லது கரூரை ஓரம் கட்டிவிட்டு இன்றைய வெப்பநிலையில் வேலூர் முதலிடத்தை பிடிக்கும் என தெரிகிறது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மழை குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "வரும் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 7ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications