நெக்ஸ்ட் இன்னிங்ஸை தொடங்கிய மழை.. சென்னையில் 45 நிமிடத்தில் என்ன நடக்கும்?.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னையில் தற்போது மீண்டும் தொடங்கிய மழை அடுத்த 30 முதல் 45 நிமிடங்களுக்கு அதிக மழையை கொடுக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது மழையில் இருந்து ஓய்வு கிடைத்த நிலையில், மீண்டும் சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: சென்னையில் அதிகளவு மழை பெய்ய போகிறது. அடுத்த 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை வெளுக்க போகிறது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இது குறித்து வெதர்மேன் கூறுகையில், குஜராத்தில் புயல் கரையை கடந்த காரணத்தால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விட்டது. இதனால் கேரளாவில் இன்னும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவில்லை. தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் வரைக்கும் சென்னைக்கு மழை வாய்ப்பு இருக்கிறது.
வரும் 24ஆம் தேதி முதல் கேரளா, கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் சென்னையில் மழை படிப்படியாக குறையும். 1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது கடல் பகுதியில் நகரும் காற்றால் இந்த மழை பெய்துள்ளது. இன்று இரவு எப்படியிருக்கும் என தெரியவில்லை. சென்னையில் குறைந்த நேரத்தில் பெய்த அதிக மழையால் சாலையில் நிறைய தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் போட்டு தண்ணீரை உறிஞ்சி தற்போது பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்காத நிலை உள்ளது. முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் சென்றிருந்தாலும் அங்கிருந்தபடியே போனில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications