சென்னை மாங்காட்டில் மோசமான வெட் பல்ப் வெப்பநிலை! வெதர்மேன் கவலை! 35 டிகிரியை தாண்டினால் அவ்வளவுதான்!
சென்னை: சென்னையில் உள்ள மாங்காட்டில் வெட் பல்ப் 32.4 டிகிரியாக இருப்பது வெப்பத்தின் உச்சநிலை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கத்தரி வெயில் கூட 28 நாட்களுக்குத்தான். ஆனால் இந்த கோடை வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் இரு மாதங்களாக கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு ஜீவராசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதீத வெயிலால் பலர் சுருண்டு விழுந்து மரணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியானால் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே உள்ளது. இரவு நேரம்தான் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகம், புதுவையில் 100 டிகிரியை கடந்து வெப்பம் உள்ளது. கரூரில் 111.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வேலூரில் 110.66 டிகிரியாகவும் ஈரோட்டில் 110.48 டிகிரி பாரன்ஹீட்டாகவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 10.2.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் இருந்தது. புதுவை, காரைக்காலில் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்கள்தான். இந்த நிலையில் மாங்காட்டில் வெட் பல்ப் வெப்பம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதாவது மாங்காட்டில் 32.4 டிகிரி செல்சியஸாக வெட் பல்ப் வெப்பநிலை இருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். வெப்ப அளவு 40.4 டிகிரியாக இருக்கும் நிலையில் வெட் பல்ப் வெப்பநிலை மோசமான அளவை எட்டியுள்ளது.
வெட் பல்ப் என்றால் என்ன?: சென்னை மாங்காட்டில் வெட் பல்ப் வெப்பநிலை 32.4 டிகிரியாக உள்ளது. பொதுவாக வெப்ப நிலையின் அளவு மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை வைத்து வெட் பல்ப் கணக்கிடப்படுகிறது. அதாவது வெப்ப நிலையை கணக்கிடும் முறை இரண்டாக உள்ளது.
ஒன்று டிரை பல்ப், இன்னொன்று வெட் பல்ப். டிரை பல்ப் வெப்ப முறை சாதாரணமானது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை கணக்கிடாமல் வெப்பமானிலை வைத்து காற்றின் வெப்ப நிலையை மட்டும் கணக்கிடுவார்கள். இதே வெட் பல்ப் என்றால் ஈரமான சூழ்நிலையில் காற்று ஈரப்பதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வெப்பநிலை அளவிடப்படும்.
வெட் பல்ப் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை தாண்டினாலே காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது என்று அர்த்தம். 35 டிகிரி செல்சியஸை தொட்டால் காற்றில் ஈரமே இல்லை என்று அர்த்தம். பொதுவாக மனிதரின் உடல் வெப்பநிலையில் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகும். வெப்பம் அதிகம் இருந்தாலும் வியர்வைதான் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. 35 டிகிரி இருந்தால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் காற்றில் ஈரப்பதமே இல்லாவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்று ஒரு நிலை பூமி வெப்பமயமாதலால் 2050 ஆம் ஆண்டுதான் வரும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதே வந்துள்ளது கவலைக்குரியது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications