கேரளாவில் மழை குறையும்.. சென்னையில் ஜூலை 8 க்கு பிறகு டமால் டுமீல் மழை பெய்யும்.. வெதர்மேன்
சென்னை: கேரளாவில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறைந்த பிறகு சென்னை மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் டமால் டுமீல் மழை தொடங்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கேரளாவில் வரும் சனிக்கிழமை வரை கனமழை பெய்யும். அங்கு படிப்படியாக மழை குறைந்துவிடும். இதைத் தொடர்ந்து மலையின் நிழல் பகுதியில் இருக்கும் தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் சென்னையில் டமால் டுமீல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

அது போல் அவருடைய பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 3 தினங்களாக கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இன்றைய தினமும் அங்கு மழை பெய்து வருகிறது. காசர்கோடு, கண்ணனூர், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அது போல் வயநாட்டில் உள்ள கபினி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் 2ஆவது நாளாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் மழை சக்கை போடு போடுகிறது. உடுப்பி- மங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. குடகில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அவலாஞ்சியில் கனமழை பெய்துள்ளது. தென்னந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் பெய்யாத மழை நீலகிரியில் உள்ள அவலாஞ்சியில் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 184 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் 200 மி.மீ. ருக்கு மேல் மழை பெய்யும், நாளையும் இதே நிலைதான் நீடிக்கும்.
வால்பாறையிலும் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. சின்னகள்ளாரில் 100 முதல் 150 மி.மீ. மழை பெய்துள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. எனவே கேரளா, கோவா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.

அது போல் நீலகிரியின் அவலாஞ்சி, பந்தலூர், கூடலூர், மேல் பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, முக்குர்த்தி பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். கொடைக்கானல், குன்னூர், ஊட்டி, மேகமலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது பாதுகாப்பானது. சென்னையில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் அந்தளவுக்கு மழை தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் காட்டியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் முழுவதும் கேரளாவில மழை பற்றாக்குறை இருந்த நிலையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை வலுவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications