அனல் கக்கும் வேலூர்! இரக்கமில்லாத ஈரோடு.. தகிக்கும் திருச்சி! சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
சென்னை: சென்னையை நோக்கி வலுவான கடற்காற்று சீக்கிரமாகவே வந்துவிட்டதால் இன்று நுங்கம்பாக்கத்திலும் மீனம்பாக்கத்திலும் தகிக்கும் வெயிலுக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளை மறுநாள், அதாவது 4ஆம் தேதி தொடங்கப் போகிறது. இது 24 நாட்களுக்கு நீடிக்கும். அதாவது இந்த மாதம் 28 ஆம் தேதி வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வெயில் கொளுத்தி எடுக்கும்.

ஆனால் தற்போது கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கடுமையாக இருந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை கொண்ட இரண்டாவது நகரமாக ஈரோடு இருந்தது.
புவனேஸ்வரத்தில் 110 டிகிரியாகவும் ஈரோட்டில் 109 டிகிரியாகவும் அதிகபட்ச வெப்பநிலை இருந்தது. அது போல் வேலூர், கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மே 1ஆம் தேதி முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்தடுத்து வெப்பநிலை படிப்படியாக உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் கோடை வெயிலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும். இதே போல் மே 4, 5 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: சென்னையை நோக்கி வலுவான கடற்காற்று வெகு விரைவில் வந்துவிட்டதால் இன்றைய தினம் நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரியும் இருக்க வாய்ப்பில்லை. அதிக ஈரப்பதம் இருக்கும். ஆனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வெயில் வாதம் தொடர்பாக மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர், நீர் மோர், இளநீர், ஜூஸ், ஓஆர்எஸ் உள்ளிட்டவைகளை அருந்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications