ஒருபுறம் மழை.. மறுபக்கம் கொளுத்திய வெயில்.. வேலூர், சேலம், ஈரோடு உள்பட 6 இடங்களில் சதம்!
சென்னை: தமிழகத்தில் கோவை, தென்காசி, தேனி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில் மறுபுறம் தமிழத்தின் மற்ற மாவட்டங்களில் வெயிலும் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக வேலூர், சேலம், ஈரோடு என 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கி விட்டது. வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக வெயில் பிப்ரவரி மாதத்திலேயே சுட்டெரிக்க தொடங்கியது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் பெரிய அளவில் வெயில் தெரியவில்லை.

எனினும் கோடைக்காலத்தில் சுட்டெரிப்பது போல வெயில் வாட்டி வதைத்து வந்தது. தொடர்ந்து மார்ச் மாத தொடக்கத்திலும் வெப்பநிலை உயர்ந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் 102.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்துள்ளது.
தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்தாலும் மதியம் வரை மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதன் படி 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரி 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதேபோன்று ஈரோடு மாவட்டத்திலும் இன்று வெயில் சதமடித்தது.
ஈரோட்டில் 101 டிகிரியும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 101 டிகிரியும், சேலத்தில் 101 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. இதற்கு அடுத்த படியாக மதுரை விமான நிலைய பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தஞ்சை மற்றும் திருத்தனியிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், மற்றொரு புறம் வெயிலும் வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. இதேபோன்றும் வரும் 11 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மற்றொரு புறம் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications