மக்களே கவனம்.. 18 மாவட்டங்களில் இன்று உக்கிரம் காட்டப்போகும் வெயில்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் காட்டி வரும் நிலையில், இன்று முதல் 28 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று மஞ்சள் அலர்ட் கொடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர். வெயிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில், "வரும் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
இன்று, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
அதனைத்தொடர்ந்து நாளை முதல் 28 ஆம் தேதி வரை திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும். எனினும், தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்து.
நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருத்தது. ஈரோட்டை தொடர்ந்து, வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் குமரியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications