மீண்டும் மீண்டுமா! நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த திடீர் வார்னிங்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை ஏற்படுத்திய வெள்ள பாதிப்பிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ள காடாக மாறின. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு வேகமாக உயர்ந்ததால் அதிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே இரண்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ காரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து இந்த இரண்டு மாவட்டங்களும் தற்போதுதான் மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தூத்துக்குடியில் தற்போது மழை பெய்கிறது@ChennaiRains @CollectorTuty @kalyanasundarsv @MasRainman @ramanathan4548 pic.twitter.com/CHD0mPQjXt
— narayanan weather man (@narayananweath1) December 28, 2023
அதாவது, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களை பொறுத்த அளவில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications