தமிழகத்தை சுத்து போட்ட மேகங்கள்.. வடக்கிலும் தெற்கிலும் காத்திருக்கும் சம்பவம்! மெட் கொடுத்த அப்டேட்
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்த நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. மே, ஜூன் மாதங்களை விட தற்போது வெயில் அதிகரித்திருப்பதாக மக்கள் கூறி வந்தனர்.

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னை வழக்கத்தை விட வெயில் அதிகரித்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் அதிக புழுக்கமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் சென்னையில் மேலும் வெயில் அதிகரிக்கும் எனவே கூறப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் கடைசி வாரம் முதல் தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வங்கக்கடல் பகுதியில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications