மூன்று புயல்கள் நிச்சயம்.. 2 புயல்கள் கட்டாயம்.. சென்னை டூ டெல்டா மக்களே உஷார்!
சென்னை: இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையானது வட கடலோர மாவட்டங்களை மையமாக வைத்தே பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெளிவாகத் தென்படும் வானிலை நிலவரங்களை வைத்துக் கணித்துக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் சென்னை டூ திருநெல்வேலி வரை 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியா தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு வடகிழக்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலைத் தமிழ்நாடு இந்தப் பருவ மழையின் போதுதான் சந்தித்தது. ஒரு நாள் முழுக்க விடாமல் பெய்த பெரும் மழையைச் சந்தித்தது. சென்னையில் பல பகுதிகள் நாள் கணக்கில் மூழ்கின. கிட்டத்தட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகள் மூழ்கின. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டு மழையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. முன் கூட்டியே சென்னையில் அதிக சேதங்கள் ஏற்படாமல் இருக்கத் துரித நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் அரக்கோணத்திற்கு நேற்றே வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை மற்றும் புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெர்தமேன்' ஹேமச்சந்திரன் பேசுகையில், "இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 5 சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த மழை அக்டோபர் மாதமே தொடங்கிவிடும். வட கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் 5 சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த மழையானது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் என மூன்று காரணங்களால் மழை பெய்யும்.
நவம்பர் 5 முதல் 25 ஆம் தேதிவரை முதல் கட்ட மழையை நாம் எதிர்பார்க்கலாம். அடுத்து டிசம்பர் 10 முதல் 25 வரை மழை வரும். இதில் நவம்பர் மாதம் முழுக்க மழை மட்டுமே அதிகம் பெய்ய கூடும். ஒருவேளை புயல் சின்னம் உருவானால் கூட மழை மட்டுமே அதிகம் காணப்படும். இது முன்பு வந்த மிக்ஜாம் போன்று இருக்கலாம். டிசம்பர் மாதம் மத்தியில் வலுவான காற்று வீச வாய்ப்பு உள்ளது. அது வர்தா, தானே போன்ற புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு 3 புயல்களை நாம் எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டில் கட்டாயம் 2 புயல்கள் வரை வீசலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டு இயல்பைவிடக் குறைவான மழைதான் பெய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு மழைக்கான நிகழ்வுகள் டெல்டா மாவட்டங்களை மையமாக வைத்தே நடக்கும். குறிப்பாகச் சென்னையில் வடகிழக்கு காற்று குவிதல் அமைவதால் இங்கும் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னை முதல் நாகப்பட்டினம் வரையான வட கடலோர மாவட்டங்களில் மிகுதியான மழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த ஆண்டு தென் தமிழ்நாட்டில் பாதிக்கும் அளவுக்கு மழை இருக்காது. வட மாவட்டங்கள்தான் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதே போல உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அக்டோபர் மாதம் அதிக மழையானது பெய்யக்கூடும். இது இடியுடன் கூடிய மழையாக மட்டுமே இருக்கும்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் மழை 44செமீட்டர் அளவு வழக்கமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அதைவிட அதிகம் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு மழையானது 1964இல் பெய்த மாதிரி இருக்கலாம். அதேபோல் 1972, 2008 ஆகிய ஆண்டுகளில் பெய்த மழை போல் இருக்கலாம். இவை லாநினா காலகட்டம். எல்நினோ என்பது கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன் பின் லாநினா தொடங்கிவிட்டது. தற்போது வலுக் குறைந்த லா நினா நிலவுகிறது. அது ஜனவரியில் வலுப்பெறும். அதனால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இயல்புக்கு மாறான மழை தமிழ்நாட்டில் பெய்யும் என எதிர்பார்க்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறுகிய கால அளவுக்குள் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்கிறார்












Click it and Unblock the Notifications