திருநெல்வேலி: நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்- உதவி எண்கள் அறிவிப்பு- அவசரகால மையம் திறப்பு!
திருநெல்வேலி: திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் நாளை மார்ச் 11-ந் தேதி மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி மாவட்ட பொதுமக்களுக்கும் மிக கனமழையை முன்னிட்டு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மார்ச் 11-ந் தேதி மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மிக கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

- மிக கனமழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் தொலைபேசி எண்:0462-2501070 ஆகியவற்றை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

- வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மிக கனமழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
- பொதுமக்கள் மழை பெய்யும் போது பழைய, சேதமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ செல்ல வேண்டாம் என்றும் தண்ணீர் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- அதேபோல துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் ஆகியவை தொடர்பாக கவனமாகவும் எச்சரிக்கையாகயும் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications