கொட்டும் மழையில்.. ஸ்பாட்டுக்கே சென்ற ஸ்டாலின்.. தூய்மை பணியாளர்களுடன் தேநீர் அருந்தினார்
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை யானைகவுனி பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களோடு அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழை நின்று விட்டது. ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

தொடர்ந்து விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இன்று காலை 11 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்தது. நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை தூய்மை பணியாளர்கள் மோட்டார் பம்புகளை வைத்து மழைநீரை வெளியேற்றி வந்தனர். தற்போது மீண்டும் மழை பெய்து மழைநீர் தேங்க தொடங்கியது.
பல இடங்களில் கால்வாய் வழியாக மழை நீர் அகற்றும் பணியும் நடந்து வந்தது. மேலும் ஒவ்வொரு மண்டலம் சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வழக்கமாக மழை நீர் எங்கெல்லாம் தேங்குமோ அங்கு எல்லாம் மோட்டார் பம்புகள், படகுகள், மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகள் சீராக நடக்கிறதா என்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் களத்திற்கே சென்றார்.

சென்னை யானைகவுனி பகுதியில் கொட்டும் மழையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை, வெள்ள மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களோடு அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார். மேலும், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்று ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் முன்பு இல்லாத வகையில் பல்வேறு இடங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் குடியிருப்புகளுக்கு புகுந்தாலோ, வீடுகளுக்குள் சென்றாலோ உடனடியாக வெளியேற்றுவதற்கு வசதியாக ராட்சத மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும் ஆயத்த பணிகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications