மழைக்கு மத்தியில் மின்சார பிரச்சனையா? உடனே ஆக்ஷன்.. மின்சாரத்துறை கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசின் மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மின்னகம் மூலமாக புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் நாளை (அக்டோபர் 15) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை ஆக்ஷன்: இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மாவட்ட வாரியாக பருவமழை நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களின் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மக்களை எச்சரிக்கும் வகையில் பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
செயற்பொறியாளர்கள் நியமனம்: இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 மண்டலங்களுக்கு 15 செயற்பொறியாளர்கள் நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
அவசர ஹெல்ப் லைன்: மேலும், பருவமழையின் போது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மின்னகம் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில், 94987 94987 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் மின்சாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை பெருமழையின் போது தண்ணீரில் முழ்கிய 4800 பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications