விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.. மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார். காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை கருதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியது.

நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு முதல் காலை வரை விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்தது. நேற்றும் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காராணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரைக்காலிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடலூரிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் மழை பெய்ததாலும், இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications