இரவு 7 மணி வரைக்கு விடாது.. அடித்து பெய்யப் போகும் மழை.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (TN Weather update) கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து எடுக்கும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி, குடவாசல், தென்கரை உள்ளிட்ட பல்வேறு படதிகளில் கனமழை கொட்டியது.

25 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இரவு 7 மணி வரைக்கும் மழை விடாமல் தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 25 மாவட்டங்களில் மழை அடித்து பெய்யும் என கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இரவு 7 மணி வரை
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16 ஆம் தேதி வரை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 10-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-08-2025 முதல் 16-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னையில் இன்று (10-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (11-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications