ஊட்டியிலேயே வியர்த்து கொட்டுது.. 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான வெயில்! வானிலை மையம் ஷாக்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (April 28) ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
பொதுவாக எல்-நினோ ஆண்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், எல்-நினோ முடிந்து அடுத்த ஆண்டும் வெப்பம் கடுமையாக இருப்பதுண்டு. கடந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பு இருந்தது. எனவே வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் வெயில் தீவிரமாக இருந்ததால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னையில் 15-16 நாட்கள் 104 டிகிரி ஃபாரான்ஹீட் வெயில் இருந்ததை நாம் பார்த்திருந்தோம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த ஆண்டு வெப்பச்சலன மழை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாத காலங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தலை காட்டியிருந்தாலும், போதுமான அளவு பெய்யவில்லை. இப்படியாக மழை குறைவு மற்றும் எல்-நினோ பாதிப்பு முடிவின் அடுத்த ஆண்டு என்கிற காரணத்தினாலும் தமிழகத்தில் வெயில் பொளந்துக்கட்டி வருகிறது.
இப்போதே இந்த அளவுக்கு வெயில் இருக்கிறது எனில், கத்திரி வெயில் எப்படி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திரி வெயில் என்பது மே மாதம் 4ம் தொடங்கி அந்த மாதம் 28ல் முடிந்துவிடும். இந்த நாட்களில் வழக்கமாக வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் கடந்த பின்னரும் கூட ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது. தென் மாவட்டங்களை இந்த வெயில் ஒரு கை பார்த்திருந்தது.
இப்படி இருக்கையில், இன்று தமிழகத்தில் வெயில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக
- ஈரோட்டில் 108 டிகிரி பதிவாகியுள்ளது.
- திருப்பத்தூர் மற்றும் தருமபுரியில் 106,
- வேலூர் மற்றும் திருத்தணியில் 105,
- சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 104,
- மதுரை விமான நிலையம் 103,
- மதுரை நகரம் 102,
- கோவை, திருச்சி, நாமக்கல்லில் 102,
- சென்னை மீனம்பாக்கத்தில் 101,
- தஞ்சையில் 100,
- பாளையங்கோட்டையில் ஏறத்தாழ 100 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், தமிழகத்திற்கு மே 1ம் தேதி வரை வெயில் குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றொரு அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று ஊட்டியில் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், கடந்த 73 ஆண்டுகளில் இப்படி வெப்பம் பதிவாகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 1951ம் ஆண்டு இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது என்றும், அதன் பின்னர் 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வெப்பம் 29 டிகிரி செல்சியஸ் என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
இதனால் கடந்த 73 ஆண்டுகளில் ஊட்டி இன்றுதான் மிக வெப்பமான நாளை எதிர்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications